மதுரை | பைக் மீது லாரி மோதி ஐடி ஊழியர் உயிரிழப்பு


மதுரை: மதுரை சிந்தாமணி சிக்னல் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், சிந்தாமணி, பழனி ஆறுமுகம் நகரில் வசித்து வந்தவர் வீரசரவணன் (29). இவர், பாண்டிகோயில் அருகிலுள்ள ஐடி நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தனது டூவீலரில் பணிக்கு புறப்பட்ட நிலையில், மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சிந்தாமணி சிக்னல் அருகே இவர் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்துக் கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று வீரசரவணனின் பைக் மீது மோதி விபத்திற்குள்ளனாது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து மதுரை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு-1 எஸ்ஐ-யான கீதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீரசரவணின் உடலை அங்கிருந்து மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரசரவணனுக்கு யோகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

x