கடனை திருப்பி கொடுக்காததால் ஆந்திர இளைஞரை காரில் கடத்திய 2 பேர் கைது


சென்னை: கடனை திருப்பி கொடுக்காததால் இளைஞரை காரில் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (20). சென்னை வடபழனியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அதிகாலை, வேலை முடிந்து தனது நண்பர் பாஸ்கர் என்பவருடன், வடபழனி துரைசாமி சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சி: அப்போது, அந்த வழியாக வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், தினேஷை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், இது குறித்து வடபழனி போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சூலூர்பேட்டை அருகே திருப்பதி - பொலுரு நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த காரை மடக்கிப் பிடித்து, தினேஷை போலீஸார் மீட்டனர்.

அவரைக் கடத்திய இருவரையும் வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் திருப்பதி பொம்மிடுகல்வா பகுதியைச் சேர்ந்த சுரேந்திர ரெட்டி (21), கடப்பா பத்வேல் பகுதியைச் சேர்ந்த வெங்கடா ஜெய மணிகண்டா (20) என்பதும், சுரேந்திர ரெட்டியிடம், தினேஷ்கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தராததால், அவரை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

x