மனைவியுடன் அடிக்கடி பேசியதால் சந்தேகம்: முதியவரை குத்திக் கொலை செய்த காவலாளி கைது


கைது செய்யப்பட்ட துளசய்யா

சென்னை: தன் மனைவியுடன் அடிக்கடி பேசியதால், முதியவரை குத்திக் கொலை செய்த காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுவாமி(64). இவரது எதிர் வீட்டில், காவலாளியாக வேலை பார்த்து வரும் துளசய்யா(53) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால், வெங்கடசுவாமி, துளசய்யா குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவியுடன் வெங்கடசுவாமி பேசுவதை சந்தேகப்பட்டு, துளசய்யா அடிக்கடி மது அருந்திவிட்டு, தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று முன் தினம் வெங்கடசுவாமி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த துளசய்யா, என் மனைவியுடன் ஏன் பேசுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடசுவாமியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடத்த வெங்டசுவாமியை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடசுவாமியின் மகன் திருமகேஷ், திருவிக நகர் போலீஸில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த துளசய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x