மகளை கொல்ல ஸ்கெட்ச் போட்ட தாய்: கொலையாளியோடு சேர்ந்து தாயை தீர்த்துக்கட்டிய மகள்


உத்தரப்பிரதேசம்: தனது 17 வயது மகளை கொலை செய்ய ஒப்பந்தக் கொலையாளியை அமர்த்திய 42 வயது பெண், அதே கொலையாளியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இட்டாஹ் மாவட்டத்தில் அல்கா என்ற பெண், அக்டோபர் 6 ஆம் தேதி வயலில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அல்கா வீடு திரும்பாததால், அவர் காணாமல் போனதாக அவரது கணவர் ரமாகாந்த் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘அல்கா தனது மகளுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பது அறிந்து மிகவும் கவலையடைந்தார். இதனால் அவர் தனது மகளை கொல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை அனுபவித்து சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சுபாஷை அல்கா தொடர்பு கொண்டார். தனது மகளை கொல்ல சுபாஷிடம் 50,000 ரூபாயை அல்கா முன்பணமாக கொடுத்தார்.

ஆனால் சுபாஷ் ஏற்கனவே தன் மகளுடன் தொடர்பு வைத்திருப்பது அல்காவுக்குத் தெரியாது. அல்காவின் திட்டத்தை அறிந்த சுபாஷ், அவரின் மகளுக்கு தகவல் தெரிவித்தார். சுபாஷை திருமணம் செய்வதாக உறுதி அளித்த அந்த பெண், தன் தாயைக் கொல்லும்படி சுபாஷிடம் வலியுறுத்தினார். இதனையடுத்து மகளை கொன்றது போன்ற புகைப்படங்களை அல்காவுக்கு சுபாஷ் அனுப்பினார். பின்னர் ஒப்பந்தப் பணத்தை கேட்பதற்காக இருவரும் ஆக்ராவில் சந்தித்தனர். அங்கு சுபாஷ் அல்காவிடம், அவரின் மகளைக் கொல்லவில்லை என்ற உண்மையை சொன்னார்.

இதற்குப் பிறகு, அந்த இளம்பெண் மற்றும் சுபாஷ் ஆகியோர் அல்காவுடன் ஒன்றாக பயணம் செய்தனர். அவர்கள் அல்காவை எட்டாவ் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு தினை வயலில் கழுத்தை நெரித்துக் கொன்று வீசினர். இந்த கொலைக் குற்றச்சாட்டின் பேரில் அல்காவின் மகள் மற்றும் ஒப்பந்த கொலையாளியான சுபாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’ என போலீஸார் தெரிவித்தனர்

x