அசாம் சிறையிலிருந்து 5 போக்சோ கைதிகள் தப்பியோட்டம்: லுங்கி, போர்வைகள் மூலம் 20 அடி சுவரை தாண்டினர்


அசாம்: மோரிகான் மாவட்ட சிறையில் இருந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 5 கைதிகள் நேற்று இரவு தப்பினர்.

மோரிகான் மாவட்ட சிறையில் இருந்து 5 போக்சோ கைதிகள் லுங்கிகள், போர்வைகள் மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தி 20 அடி சிறைச் சுவரை தாண்டி குதித்து நேற்று இரவு தப்பியுள்ளனர். தப்பியோடியவர்கள் சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் போக்சோ தொடர்பான குற்றங்களில் கைதாகி சிறையில் இருந்தனர்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் நடந்ததால், சிறை அதிகாரிகளும், காவல்துறையினரும் பீதியில் உறைந்தனர். மோரிகான் மாவட்ட சிறைச்சாலை தற்போது கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவால் நிர்வகிக்கப்படுகிறது. கூடுதல் துணை ஆணையர் பல்லவி கச்சாரி சிறையின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்.

தப்பியோடியவர்களை மீண்டும் பிடிப்பதற்காக அதிகாரிகள் பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கைதிகள் எப்படி ஒருங்கிணைத்து திட்டம் தீட்டி தப்பியோடினார்கள் என்பதை அறிய விசாரணைகள் நடந்து வருகிறது.

x