மகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை - அதிர்ச்சி வீடியோ


உத்தரப் பிரதேசம்: லலித்பூரில் சொல்பேச்சு கேட்காத மகளை கயிற்றில் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு தந்தை அடிக்கும் கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாம்னாவில் வசிக்கும் 45 வயதான கோவிந்த் தாஸ் ராய்க்வார், சொல்பேச்சு கேட்காத காரணத்தால் தனது 10 வயது மகள் சோனத்தின் கால்களில் கயிறை கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார். இந்த கொடுமையை நேரில் பார்த்த உள்ளூர் கிராமவாசி ஒருவர் தலையிட்டு சிறுமியை காப்பாற்றினார்.

தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வரும் இந்த வீடியோவில், தலைகீழாகத் தொங்கிய நிலையில் தந்தை தனது மகளை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் தெரிகின்றன. அந்த வீடியோவில், "அப்பா, தயவு செய்து என்னை விடுங்கள்" என்று சிறுமி கெஞ்சினாலும், தந்தை கடுமையான தாக்குதலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பார் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கு பேசிய பார் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ராஜா தினேஷ் சிங், “கோவிந்த் ராய்க்வார் தனது மகள் கீழ்ப்படிந்து நடக்காததற்காக சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து வைரலாக்கி உள்ளனர். இதையடுத்து, கோவிந்த் தாஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

x