பள்ளபட்டியில் சைக்கிளுடன் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு


கரூர்: பள்ளபட்டியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் சைக்கிளுடன் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பள்ளபட்டி ஹபீப் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் மகன் முகமது உஸ்மான் (12). பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று (அக்.8ம் தேதி) மாலை 4.45 மணிக்கு பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் தனியார் வங்கி எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் சைக்கிளுடன் முகமது உஸ்மான் தவறி விழுந்தார். இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயன்றுள்ளனர்.

மழை பெய்து, மழை நீர் சாக்கடை கால்வாயில் வேகமாக சென்றதால் மழைநீர் சிறுவனை இழுத்து சென்றது. பொதுமக்கள் உதவியுடன் சிறுவனை தேடும் பணிகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சுமார் அரை கி.மீட்டர் தூரம் உள்ள பள்ளபட்டி அரசு மருத்துவமனை முனை அருகேயுள்ள நங்காஞ்சி ஆற்றில் சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு சிறுவன் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

x