மனநலம் குன்றிய நபரின் திடீர் தாக்குதல்; 2 பேர் மரணம்: நாக்பூர் ரயில் நிலையத்தில் சோகம்


மும்பை: இன்று அதிகாலை நாக்பூர் ரயில் நிலையத்தில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

நாக்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் மனநலம் குன்றிய நபர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் ஸ்லீப்பர் ஸ்லாப்பை கொண்டு, பிளாட்பாரம் எண் 6ல் தூங்கிக் கொண்டிருந்த ஏழு பேரை கண்மூடித் தனமாக தாக்கினார்.

அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அரசு ரயில்வே போலீஸாரின் ரோந்துக் குழுவினர், தாக்குதல் நடத்திய நபரைக் கட்டுப்படுத்தினர். இத்தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேஷ்குமார் (40) என அடையாளம் காணப்பட்டார். மற்றவர் அடையாளம் தெரியாத வீடற்ற நபர் ஆவார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

45 வயதான அந்த மனநலம் குன்றிய நபர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்த போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து நாக்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

x