கோவளத்தில் மீன்களை திருடிய இருவர்: படகில் பதுங்கியிருந்து கையும் களவுமாக பிடித்த மீனவர்கள்!


கோவளம்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் மீனவர்கள் தினசரி படகுகளில் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். நள்ளிரவில் வருவதால் கடற்கரைகளில் படகுகளை ஒட்டி தாங்கள் வைத்துள்ள தெர்மாகோல் பெட்டிகளில் மீன்களை ஐஸ் கட்டிகளை போட்டு வைத்து விட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விடுவர்.

காலையில் வந்து இந்த மீன்களை எடுத்து வியாபாரம் செய்வர். இதனை வழக்கமான பணியாக செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவ்வாறு எடுத்து வந்து வைக்கப்படும் பெரிய அளவிலான மீன்கள் திருடு போனதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கேமராக்களை பொருத்தினர். பின்னர், இந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து மீன்களை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் படகுகளில் தூங்குவது போல் மீனவர்கள் பதுங்கி இருந்து திருடர்களை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் தூங்கினர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு பெண்ணும், ஆணும் மோட்டார் சைக்கிளில் வந்து தெர்மாகோல் பெட்டியில் வைத்திருந்த மீன்களை திருடி தங்களது பெட்டிகளில் வைத்து அடுக்கியுள்ளனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த மீனவர்கள் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தாம்பரம் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்யும் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ஜூலி (27), நிவேதன் (19) என்பது தெரியவந்தது. பிடிபட்ட அவர்கள் இருவரையும் மீனவர்கள் கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x