திருப்போரூர் காவலாளி கொலை வழக்கில் கொலையாளி கைது


திருப்போரூர்: திருப்போரூர் காவலாளி கொலை வழக்கில் கொலையாளியை தென்காசியில் தனிப்படையினர் கைது செய்தனர்.

திருப்போரூரை அடுத்த காலவாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பர்னிச்சர் கடை உள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வில்லுவாடி கிராமத்தை சேர்ந்த ராமர் (41) என்பவர் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி கடையில் ராமர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு அவருடன் பணி செய்த அசோக்கை தேடி வந்தனர்.

இந்நிலையில் அசோக் தென்காசி பகுதியில் சுற்றித் திரிவதாக திருப்போரூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்போரூர் காவல் ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ. வினோத்குமார் உள்ளிட்ட தனிப்படையினர் தென்காசி சென்று உள்ளூர் போலீஸார் உதவியுடன் அசோக்கை கைது செய்தனர்.

அவரை திருப்போரூர் அழைத்து வந்து விசாரணை செய்தால்தான் ஏன் ராமரை அவர் கொலை செய்தார் என்பதற்கான காரணங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

x