1,014 கிலோ குட்கா பறிமுதல் - பெண்ணுடன் சென்னை இளைஞர் கைது


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: மடிப்பாக்கத்தில் 1,014 கிலோ குட்கா போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்த பெண்ணும் இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் குட்கா போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மடிப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி, அதில் பயணித்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார், காரை சோதனை செய்தனர்.

அப்போது, காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவர்கள் கோவிலம் பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (25), மடிப்பாக்கத்தை சேர்ந்த கவுதமி (35) என்பதும், இருவரும் பெங்களூரில் இருந்து குட்கா பாக்கெட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 1,014 கிலோ குட்கா, ரூ.31,750 பணம், 2 செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

x