மதுரை கள்ளந்திரி கால்வாயில் சிக்கிய விழுப்புரம் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு


மதுரை: மதுரை கள்ளந்திரி கால்வாய் தண்ணீரில் சிக்கிய விழுப்புரம் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்டீன். இவரது மகன் செல்வராஜ் (35). இவர், விழுப்புரத்தில் கறிக்கடை ஒன்றில் பணிபுரிந்தார். இவர் உட்பட 15 நபர்கள் வேன் ஒன்றில் மதுரைக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை இவர்கள் அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் கள்ளந்திரி கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது கால்வாயில் இறங்க முயன்ற செல்வராஜ் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார்.

அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் ஒத்தக்கடை, அப்பன் திருப்பதி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செல்வராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒத்தக்கடை அருகே கைலாசபுரம் பகுதியிலுள்ள கால்வாயில் செல்வராஜின் உடல் இன்று மதியம் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x