அரசு பள்ளி ஆசிரியையிடம் பண மோசடி - விஜய் கட்சி நிர்வாகி கைது


கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டைமேடு குடித் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(40). முசிறியில் இருசக்கர வாகன ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை குழு பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில், குளித்தலை கலப்பு காலனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியையான சங்கீதா என்பவர், தனது பூர்விக நிலம் 2 ஏக்கரை விற்பனை செய்து தருமாறு கூறி, அதற்கான நில ஆவணங்களில் கையெழுத்திட்டு ராஜாவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை ராஜா விற்பனை செய்யாமல், மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நில ஆவணத்தை அடமானம் வைத்து ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து சங்கீதா கேட்டபோது, அவரை ராஜா திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆசிரியை சங்கீதா அளித்த புகாரின்பேரில், ராஜா மீது மோசடி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

x