சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கரூரில் ஒருவர் போக்சோவில் கைது


கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கூடலூர் கீழ்பாகம் ரங்கபாளையத்தைச் சேர்ந்தவர் வீராசாமி(54). கூலித் தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, செப்.30-ம் தேதி குறைபிரசவத்தில் இறந்த நிலையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியின் தாய் குழந்தையை ஆற்றங்கரையோரத்தில் புதைத்துள்ளார். பின்னர், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சின்னதாராபுரம் உதவி ஆய்வாளர் அழகுராம் விசாரணை நடத்தி, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும், க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வீராசாமியை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து, உடந்தையாக இருந்த சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x