பள்ளி வேனில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது; புனேயில் அடுத்த அதிர்ச்சி!


புனே: இரண்டு ஆறு வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேனின் 45 வயது ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புனேயில் செப்டம்பர் 30 ஆம் தேதி வான்வாடி பகுதியில் பள்ளிக்குச் சென்றுவிட்டு குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பள்ளியின் வாகனத்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் வேனில் ஒரு பெண் உதவியாளர் இருந்தாரா என்பதை போலீசார் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

"பள்ளி வேனின் ஓட்டுநர் சஞ்சய் ரெட்டி இரு சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவிகளில் ஒருவர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார். பிறகு இதுகுறித்து அவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்று வான்வாடி காவல் நிலைய அதிகாரி கூறினார்.

இதுகுறித்து புதன்கிழமையன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சஞ்சய் ரெட்டி மீது பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சஞ்சய் ரெட்டியை அக்டோபர் 8 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக புனே துணை போலீஸ் கமிஷனர் எஸ். ராஜா கூறினார்.

வேறு எந்த பெண் மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் இதேபோல் துன்புறுத்தல் நடந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது. இந்த சமபவத்தின்போது வேனில் ஒரு பெண் உதவியாளர் இருந்தாரா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று துணை போலீஸ் கமிஷனர் எஸ். ராஜா கூறினார்.

இச்சம்பவம் குறித்து நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

x