கரூர் அருகே கைவிடப்பட்ட கல் குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு


கரூர்: கரூர் அருகேயுள்ள ஆத்தூர் ஆலாம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மகன் ராகுல் (14). ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (14). வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். குட்டக்கடை பகுதியைச் சேர்ந்த இளமதன் (15) ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் இன்று (அக். 3ம் தேதி) மதியம் ஆத்தூர் பெரும்பாறையில் கைவிடப்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கும் கல் குவாரி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராகுல், கால் கழுவுவதற்காக கல்குவாரி நீரில் இறங்கியப்போது குவாரிக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் தகவல் அறிந்து வந்து சுமார் 2 மணி நேரம் ராகுலை சடமாக மீட்டனர். வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

x