மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை


திருப்பூர்: மின் இணைப்புக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருப்பூர் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை இன்று (அக்.3) விதிக்கப்பட்டது.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சொந்தமாக அதே பகுதியில் 4 வீடுகள் மற்றும் 3 கடைகளை 2009ம் ஆண்டு கட்டினார். அப்போது திருப்பூர் வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேன் மாரிமுத்து (44) என்பவரை அணுகி, மின் இணைப்பு கோரினார். அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்கவே, சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு ஜன.12ம் தேதி ரசாயனம் தடவிய பணத்தை மாரிமுத்துவிடம், சந்திரசேகர் தந்தபோது அதனை மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில், நீதிபதி செல்லதுரை தீர்ப்பு அளித்தார். அதில், மாரிமுத்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செந்தில்குமார் ஆஜரானார்.

x