பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு


பரமக்குடி: பரமக்குடியில் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன்(53).

இவர் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தும் பொழுது மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசிக் கொண்டு பாடம் நடத்தியதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் வரும் கவர்ச்சி காட்சிகளைப் பற்றி மாணவிகளிடம் கூறி பாடம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் விசாரணைக்கு பின், பள்ளியின் கல்விக் குழுவிடம் கலந்து ஆலோசனை செய்தார். அதன் பின் ஆசிரியர் வெங்கடேசனை கடந்த செப்.14-ம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சமூக அமைப்புகள் ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், ஆசிரியர் மீது புகார் அளித்தார். அதன்படி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் போலீஸார் ஆசிரியர் வெங்கடேசன் மீது பாலியல் ரீதியாக மாணவகளிடம் ஆபாசமாக பேசியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x