லிஃப்ட் கொடுப்பதாக கூறி பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று காலையில் ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லி ஒரு பெண்ணை ஏற்றிச்சென்று கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சித்ராதேவி (43). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இதற்காக சித்ராதேவி தினமும் காலை 5 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டு பேருந்தில் அருப்புக்கோட்டை செல்வது வழக்கம். அதுபோல் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அருப்புக்கோட்டை செல்வதற்காக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சித்ராதேவியை மறித்து, தான் சவாரிக்காக அருப்புக்கோட்டை செல்வதாகவும், அதனால் தனது ஆட்டோவிலேயே அருப்புக்கோட்டையில் இறக்கிவிடுவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி சித்ராதேவியும் அந்த ஆட்டோவில் ஏறிச்சென்றுள்ளார். பாலவநத்தம் சென்றபோது அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

பாலவநத்தம்- அருப்புக்கோட்டை இடையே ஆட்டோ சென்றபோது, சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்திய, ஓட்டுநரும் உடன் வந்த நபரும் திடீரென சித்ராதேவியை கத்தியால் பல இடங்களில் குத்தியுள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக் கொண்டு சித்ராதேவியை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அப்போது, அவ்வழியே சென்றோர் சாலையோரத்தில் ரத்தக் காயத்துடன் கிடந்த சித்ரா தேவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சித்ராதேவி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தொடர் விசாரணையில், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது விருதுநகரைச் சேர்ந்த தங்கப் பாண்டி (37), அவரது நண்பர் குல்லூர் சந்தையைச் சேர்ந்த ராமநாதன் (36) என்பது தெரியவந்தது. அதையடுத்து, தூத்துக்குடி சாலையில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கொள்ளையடித்த 5 பவுன் நகைகள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

x