இளம்பெண்ணை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிய கும்பல் - சங்ககிரி அருகே கொடூரம்


சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இளம்பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே வைகுந்தம் சர்வீஸ் சாலை ஓரமாக தரைமட்ட பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் கேட்பாரற்று சூட்கேஸ் கிடந்தது. தகவல் அறிந்து வந்த எஸ்பி கவுதம் கோயல், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் கார்த்திகேயினி தலைமையிலான போலீஸார் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அதில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

முகத்தில் மூன்று பிளாஸ்டிக் கவர்கள் போர்த்தப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் பெட்ஷீ்ட்டால் மூடப்பட்டு, தலைமுடி இல்லாமல் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. இளம்பெண்ணின் இரண்டு கை களிலும் ஆறு விரல்கள் இருந்தன. ஆடை இல்லாத நிலையில் இளம்பெண் இருந்ததால், பாலியல் வன்கொடுமை செய்து மர்ம கும்பல் கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரை வழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகை நகல்களை பிரதி எடுத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொலையாளிகள் தப்பி சென்ற வழித்தடத்தை கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இக்கொலை வழக்கு தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்ஐ.க்கள் ஸ்ரீராமன், கண்ணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வருகின்றனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை தொடங்கி யுள்ளனர். மேலும் கொலையான இளம்பெண் யார், எந்த ஊர், பெயர் விவரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x