வத்திராயிருப்பு ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் இருவர் கைது


வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் லோடு ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி சர்ச் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (26). இவரது மனைவி மாலதி (24). இவர்களுக்கு 3 மற்றும் 1 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். முத்துக்குமார் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை மாலை கூமாபட்டி ஊரணி தெரு பகுதியில் உள்ள தோட்டத்தில் முத்துக்குமார் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இச்சம்பவம், குறித்து தகவலறிந்த கூமாபட்டி போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனிடையே, முத்துக்குமார் கொலை தொடர்பாக கூமாபட்டியைச் சேர்ந்த கந்தகுமார் (26), மாரீஸ்வரன் (24) ஆகிய இருவர் நேற்று இரவு சிவகாசி போலீஸில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன் விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி முத்துக்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

x