திருப்பூர் பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை - 19 வயது உரிமையாளர் கைது


திருப்பூர்: பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, நிறுவனத்தை நடத்தி வந்த 19 வயது இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள முருகம்பாளையத்தை சேர்ந்தவர் அழகுராஜா (35). பனியன் நிறுவன ஒப்பந்ததாரர். பனியன் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த வசந்த் (19), பனியன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்ததில் பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், முருகம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அழகுராஜா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் வீரபாண்டி போலீஸார் சென்று, அழகுராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து, வசந்தை கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

x