தாயை மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள் - குடும்ப தகராறில் கொடூரம்


ஜிரானியா: மேற்கு திரிபுராவில் 62 வயதான தாயை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பக்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமர்பாரியில் சனிக்கிழமை இரவு 62 வயதான பெண் ஒருவரை, அவரது மகன்கள் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக்கொன்றுள்ளனர். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கணவனை இழந்த அந்த பெண் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். அவரது மற்றொரு மகன் அகர்தலாவில் வசித்து வந்தார்.

இந்த சம்பவத்தில் மகன்களை கைது செய்துள்ள போலீஸார், குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய ஜிரானியாவின் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி கமால் கிருஷ்ணா கோலோய், "ஒரு பெண் தீவைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று, மரத்தில் எரிந்த நிலையில் இருந்த உடலைக் கண்டெடுத்தது. உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது இரண்டு மகன்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள், விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்படுவார்கள். குடும்பத் தகராறு இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், இதில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

x