5 வயது சிறுவன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து பகிர்ந்த கொடூரம்!


உத்தரபிரதேசம்: ஹபூர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுவன் இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 19ம் தேதி அன்று 5 வயது சிறுவனை அர்ஷ் மற்றும் ஜுனைத் எனும் இருவர், சிறுவனது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அருகிலுள்ள பண்ணையில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை பண்ணையில் ஆடு மேய்க்கும் நபர்களான ரிஸ்வான் மற்றும் அல்பேஸ் ஆகியோர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, செப்டம்பர் 26ஆம் தேதி இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுவனது உடலில் உள்ள காயங்கள் குறித்து குடும்பத்தினர் விசாரித்ததில், நடந்த முழு சம்பவத்தையும் அவர் கூறினார்.

சிறுவனின் குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து கேள்வி கேட்க குற்றவாளிகளின் வீட்டிற்குச் சென்றபோது, அவர்கள் சிறுவனின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். மேலும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின்படி, குற்றவாளிகள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து பேசிய ஹாபூர் காவல் ஆய்வாளர் விஜய் குமார், "சிறுவனின் குடும்பத்தினர் நான்கு பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறினார்.

x