திருக்கழுக்குன்றம்: பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு


விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து.

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலை வளைவில் இன்று காலை தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் சட்டக்கல்லூரி மாணவி நிஷாந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அணுபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகள் நிஷாந்தினி(23). இவர், பல்லாவரம் பகுதியில் தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவி நிஷாந்தினி இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கி உருக்குலைந்த இருசக்கர வாகனம்

அப்போது, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் செங்கல்பட்டு-கல்பாக்கம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும், மாணவியின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

x