வாங்கிய வாழைப் பழத்திற்கு பணம் கேட்ட வாழைப்பழ வியாபாரி உள்ளிட்ட இரண்டு பேரை கத்தியால் குத்திய 3 பேரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் அவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு கேரளாவைச் சேர்ந்த 3 பேர் பணம் இல்லாமல் வாழைப்பழம் கேட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் விழுப்புரம் மருதூரை சேர்ந்த சரவணனின் நண்பரான காமராஜ் உள்ளிட்ட 2 பேர் அங்கு வாழைப்பழம் வாங்க வந்தனர். அப்போது அவர்கள் வெளி மாநிலத்தவர் தகராறில் ஈடுபட்டது கண்டு தட்டிக் கேட்டுள்ளனர். அவர்களுக்கும், அந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வாழைப்பழ வியாபாரி சரவணன், ”இங்கு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்களில் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதைத் தடுக்க வந்த காமராஜையும் அந்த வடமாநில வாலிபர் குத்தினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் மூவரையும் சூழ்ந்துள்ளனர். அப்போது ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்ற இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, தகவலறிந்து வந்த விழுப்புரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள், காயமடைந்த நால்வரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.