அதிர்ச்சி சம்பவம்; சென்னையில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... அதன் தாய் 3 வாரம் கழித்து கோவையில் தற்கொலை


தூக்கிட்டு தற்கொலை

சென்னை திருமுல்லைவாயலில் கடந்த மாதம் 28ம் தேதி தனது குழந்தை பால்கனியில் தவறி விழுந்ததில், அக்குழந்தையின் தாய் கோவை மாவட்டம் காரமடையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் - ரம்யா. இத்தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி குழந்தை ஹைரினுக்கு தாய், பால்கனியில் வைத்து உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி பால்கனி கூரையில் விழுந்தது.

பால்கனியில் தவறி விழுந்த குழந்தை (கோப்பு படம்)

அப்போது குழந்தை மேற்கூரையிலிருந்து வழுக்கி கீழே விழ இருந்த நிலையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் அந்த குழந்தையின் தாய் ரம்யா, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் குழந்தை தவறி விழுந்த சம்பவத்துக்குப் பின்னர் இத்தம்பதி காரமடைக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு கடந்த சில நாள்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்த ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x