திருவள்ளூர் அருகே மாணவி மரணம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி மேட்டுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனி (18). தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவி ரஞ்சனி, காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது தவறான தகவல் எனவும், இதனை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் மாணவியின் மரணம் குறித்து உண்மையான காரணத்தை கண்டறிந்து தெரிவிக்க போலீஸார் தவறி விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செய்தி வெளியான நாளிதழை வைத்துக்கொண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் அமர்ந்தபடி போலீஸாருக்கு எதிராகவும், செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராகவும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அப்போது போலீஸாருடன் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...