கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!


கண்ணூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் கார்

கேரளாவின் கண்ணூரில் நேற்று நள்ளிரவு கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், கண்ணூர் கண்ணபுரம் பகுதியில் நேற்று இரவு 10.15 மணியளவில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரி, தலசேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானாது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் காளிச்சனடுக்கத்தைச் சேர்ந்த கே.என்.பத்மகுமார் (59), பீமானடியைச் சேர்ந்த சூரிக்கட் சுதாகரன் (52), கொழுமல் கிருஷ்ணன் (65), அஜிதா (35) மற்றும் ஆகாஷ் (9) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல் இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளார்.

போலீஸார் விசாரணையில், சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் காருக்குள்ளேயே இறந்து கிடந்துள்ளனர். விபத்தில் அப்பளமாய் நொறுங்கிய காரின் கதவுகளை உடைத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார், படுகாயமடைந்த சிறுவன் ஆகாஷை, பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஆகாஷ் உயிரிழந்தான்.

விபத்தில் சேதமடைந்த சிலிண்டர் லாரி

விபத்தில் உயிரிழந்த சுதாகரனின் மகன் சவுரவ் சி.ஏ. படித்து வருகிறார். கோழிக்கோட்டில் உள்ள விடுதி ஒன்றில் அவரை கொண்டு சென்று விட்டுவிட்டு, ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே தீயணைப்புத் துறையினர், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து கண்ணூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

x