தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!


வால்பாறை கொண்ட ஊசி வளைவில் சுற்றுலா வேன் பாறை மீது மோதி விபத்து - 31 பேர் காயம்

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று, கொண்டை ஊசி வளைவில் உள்ள பாறையில் மோதி விபத்திற்கு உள்ளானதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (55). இவரது ஏற்பாட்டில் 13 குழந்தைகள் உட்பட 31 பேர் கொண்ட குழுவினர் கடந்த 24ம் தேதி திருவாரூரில் இருந்து ஐந்து நாள் பயணமாக கேரளாவிற்கு சுற்றுலா புறப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சென்று விட்டு அங்கிருந்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். வால்பாறையில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி நேற்றிவு சென்று கொண்டிருந்தனர்.

வால்பாறை கொண்ட ஊசி வளைவில் சுற்றுலா வேன் பாறை மீது மோதி விபத்து - 31 பேர் காயம்

வாகனத்தை தினேஷ் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை திருப்ப முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த பாறையில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 31 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

அங்கு 13 குழந்தைகள் உட்பட 31 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட ஆழியார் மற்றும் காடாம்பாறை காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தது விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே பயணிக்குமாறு வனத்துறையினரும், காவல்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

x