நீடாமங்கலம் அருகே டிராக்டர் ஏற்றி பெண் கொலை


திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையில், டிராக்டர் ஏற்றி பெண்ணைக் கொன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். நீடாமங்கலம் வட்டம் சோனாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி மனைவி இந்துமதி(45). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்த வட்டி தொழில் செய்து வரும் காந்தியிடம் 6 மாதங்களுக்கு முன்பு சிவாஜி ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து வட்டியுடன், கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கூடுதல் வட்டி கேட்டு சிவாஜி குடும்பத்தினரை அவ்வப்போது காந்தி மிரட்டி வந்ததாகவும், இதனால், இரு தரப்பினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சிவாஜி வீட்டுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற காந்தி, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் காரை டிராக்டரால் மோதியுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து இந்துமதி வெளியே வந்து, காந்தியை சத்தம் போட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த காந்தி, டிராக்டரால் இந்துமதியை மோதிவிட்டு, டிராக்டரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார். டிராக்டர் மோதியதில் அந்த இடத்திலேயே இந்துமதி உயிரிழந்தார்.

தகவலறிந்து நீடாமங்கலம் போலீஸார் சென்று இந்துமதி உடலை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். நீடாமங்கலம் தனிப்படை போலீஸார் காந்தியைத் தேடி வருகின்றனர்.

x