திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு: மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல்


திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு நேற்றுஉறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்சி முத்தரசநல்லூர் அருகிலுள்ள பளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி(40). இவர் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செப்.27-ம்தேதி திராவிடமணியை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திராவிடமணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவர் பரிசோதித்துவிட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு திராவிடமணி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திராவிடமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த திராவிடமணியின் உறவினர்கள், சிறையில் போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதையொட்டி, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர்போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x