தென்காசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை


தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஆய்க்குடி அருகே உள்ள கம்பிளி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (70). இவரது மனைவி சுடலைமாடத்தி (65). இவர்கள், ஊருக்கு அருகே உள்ள தங்களது தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகன் முருகேசன் (50). இவர், தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கம்பிளியில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முருகேசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன் கண் பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முருகேசன் தனது மருமகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு, திருநெல்வேலிக்கு சென்று தான் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மகன் சிவா, தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அழைப்பை முருகேசன் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சிவா, தனது தாத்தாவின் தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மாட்டு தொழுவத்தில் பரமசிவன், சுடலை மாடத்தி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டுக்குள் முருகேசன் சடலமாக கிடந்துள்ளார். அருகில் விஷ மருந்து கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவர்களது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x