கும்பகோணம் அருகே தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு


கும்பகோணம்: தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் வட்டம், புத்தூரில், தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறியவர் மின்சாரம் பாய்ந்து, அந்த மரத்தின் மேலேயே உயிரிழந்தார்.

புத்தூர், மேலத் தெருவைச் சேர்ந்த மதியழகன் (50). இளநீர் வியாபாரியான இவருக்கு லதா(40) மனைவியும், நாகராஜன்(13), கேசவன்(12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர், காலை வழக்கம் போல் இளநீர் வியாபாரம் செய்வதற்காக, மேட்டுத்தெரு, கொங்கன் வாய்க்கால் அருகில் உள்ள தென்னை மரத்தில் ஏறினார். அப்போது, அந்த வழியாகச் சென்ற மின்கம்பி, அவர் மீது உரசியதால், அந்த மரத்தின் மேலேயே உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவலறிந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர், மரத்தில் ஏறி, அவரது உடலை மீட்டு, பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x