கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது


விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி விஷச் சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சையில் குண மடைந்து நலமுடன் வீடு திரும்பினர்.

இது குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி அடுத்த சு.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (40) என்பவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் பரிந்துரைத்ததை அடுத்து கண்ணனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

இதையடுத்து கண்ணனை விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கண்ணனை சேர்த்து இதுவரை 16 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x