தாயின் நினைவாக ஓட்டிய டூவீலர் திருட்டு - திரும்ப ஒப்படைக்க ரூ.10,000 சன்மானம் அறிவித்த மாநகராட்சி ஊழியர்


மதுரை: மதுரையில் தாயின் நினைவாக ஓட்டி வந்த டூவீலர் திருடு போனதால் திருடியவரே திரும்ப ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்து மாநகராட்சி ஊழியர் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

மதுரை மாநகர் காளவாசல் பொன்மேனிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). இவரது தந்தை வேல்முருகன் 1998-ல் ஆண்டு காலமாகிவிட்டார். இதனால், மதுரை மாநகராட்சியில் அவர் பார்த்து வந்த வேலை வாரிசு அடிப்படையில் கார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. மாநகராட்சி பணிக்கு மகன் நடந்து செல்வதை அறிந்த கார்த்திகேயனின் தாயார் கருப்பாயி, சீட்டு கட்டிய பணத்தில் 2002ல் டூவீலர் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அன்று முதல் கடந்த 22 ஆண்டுகளாக கார்த்திகேயன் அந்த டூவீலரை ஓட்டி வந்தார்.

2021ம் ஆண்டு கரோனா நேரத்தில் கருப்பாயி காலமானார். தயாரின் நினைவாக அவர் வாங்கிக் கொடுத்த டூவீலரை நினைவுக்கூரும் விதமாக கார்த்திகேயன் அதை கண்ணும் கருத்துமாக பராமரித்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மதுரை பைபாஸ் சாலை பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார் கார்த்திகேயன்.

அப்போது அங்கு நிறுத்திவிட்டுச் சென்ற அவரது டூவீலர் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அவரது டூவீலரை தேடி வருகின்றனர்.

அந்த டூவீலரின் தற்போதைய மதிப்பு வெறும் ரூ.5 ஆயிரம் இருக்கலாம் என்றாலும், தனது தாயாரின் நினைவாக வைத்திருந்த அந்த டூவீலர் திருடு போனதால் மனசொடிந்து போன கார்த்திகேயன், தனது டூவீலரின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை மதுரை முழுக்க ஒட்டி, இதைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், "தனது தாயைப் போன்று அந்த டூவீலரை நான் நேசித்து பராமரித்து வந்தேன். அது காணாமல் போனது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருவேளை, தனது டூவீலரை திருடியவர் யாரேனும் என்னை தொடர்புகொண்டு பேசி கொண்டு வந்து கொடுத்தாலும் அவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் கொடுப்பேன். நோட்டீசை பார்த்து சிலர் எனக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், திருடியவர் யாரும் பேசவில்லை" என்று கார்த்திகேயன் கூறினார்.

x