என் மரணத்துக்கு காரணம் இவர்கள்தான்: கடிதம் எழுதி வைத்து விட்டு நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை


நாகர்கோவில்: நாகர்கோவில் ரஹமத் கார்டன் காலனி 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆஷா புஷ்ரா (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாத இவர் கடந்த 22-ம் தேதி நாகர்கோவில் பால்பண்ணை அருகே மயங்கி கிடந்தார்.

அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஷா புஷ்ரா விஷம் குடித்திருந்தது தெரிய வந்ததையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஷா புஷ்ரா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

இதற்கிடையே திருமணம் செய்வதாக ஒரு இளைஞர் ஏமாற்றியதால் ஆஷா புஷ்ரா தற்கொலை செய்து இருப்பதாகவும், ஏற்கெனவே இது தொடர் பாக வடசேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆஷா புஷ்ராவின் உறவினர் அபுல் பயாத் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் ஆஷா புஸ்ரா எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.

அதில், தன்னுடைய மரணத்துக்கு தனியார் நிறுவன உரிமையாளர், அவரது நண்பர் மற்றும் போலீஸார் தான் காரணம் என்று எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆஷா புஷ்ரா விஷம் குடித்த பிறகு வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x