தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி ‘நாடகமாடிய’ சின்னமனூர் அதிமுக நகர செயலாளர்!


பிச்சைக்கனி

சின்னமனூர்: சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் கடந்த 24ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. விசாரணையில் இவரது ஆதரவாளர்களை வீசச் செய்து நாடகமாடியது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிச்சைக்கனி தலைமறைவானார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38). இவரது வீட்டுடன் இணைந்த கட்சி அலுவலகம் உத்தமபாளையம் சாலையில் அமைந்துள்ளது. கடந்த 24ம் தேதி மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஒன்று மட்டும் வெடித்துச் சிதறியது. இது குறித்து பிச்சைக்கனி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் தனக்கும், சின்னமனூர் 13வது வார்டு அதிமுக உறுப்பினர் உமாராணி மற்றும் அவரது மகன் வெங்கடேசனுக்கம் முன்விரோதம் இருந்தது. அவர்கள் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று போலீஸிடம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும், அவரது வீட்டில் இருந்து 6 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் இருவரும் ஆட்டோவில் சிலரும் பெட்ரோல் நிரப்பிய மதுபாட்டில்களை வீசியது தெரிய வந்தது. இவர்கள் பிச்சைக்கனி தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பெட்ரோல் குண்டு வீச்சு நாடகமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை மாற்றினர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,"கம்பத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிச்சைக்கனி எதிர்த்தரப்பைச் சேர்ந்த வெங்கடேசனை தாக்கி உள்ளார். இது குறித்து வெங்கடேசன் கம்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த பிச்சைக்கனி தனது ஆதரவாளர்களை சின்னமனூரில் உள்ள வெங்கடேசன் வீட்டுக்கு அனுப்பி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.

இந்த சம்பவத்திலும் பிச்சைக்கனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு வழக்குகள் தனக்கு எதிராக பதிவானதால், தன் மீதான அபிமானத்தை கட்சியில் ஏற்படுத்த விரும்பினார். இதற்காக தனது ஆட்கள் சிலரை ஏற்பாடு செய்து தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசச் செய்துள்ளார். இந்த உண்மை தெரிய வந்ததால் பிச்சைக்கனி உள்ளிட்ட 10 பேர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று போலீஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பிச்சைக்கனி ஆதரவாளர்களான வீட்டு காவலாளி மாரியப்பன், முத்துவேல், செல்வராஜ், பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிச்சைக்கனி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அதிமுக நகரச் செயலாளரே தனது வீட்டுக்கு வெடிகுண்டு வீசி நாடகமாடியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x