சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பெரியகுளத்தில் போக்சோவில் கோயில் பூசாரி கைது


பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு திலகர் (70) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று (செப்.25) மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சுமார் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 9 வயதுடைய சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோயிலுக்குள் அழைத்துள்ளார். பின்பு, கோயிலுக்குள் சென்ற சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒரு சிறுமி பதறி அடித்து கோயிலில் இருந்து வெளியே ஓடி வந்து பெற்றோரிடம் விவரத்தைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறார்களின் பெற்றோர், உறவினர்கள் கோயில் முன்பு கூடினர்.

இதனால் பயந்து போன திலகர் கதவை பூட்டிக் கொண்டு கோயிலுக்குள் பதுங்கினார். தகவலின் பேரில் பெரியகுளம் வடகரை போலீஸார் கோயிலுக்குள் சென்று திலகரிடம் விசாரணை நடத்தினர். சிறுவர், சிறுமியிடம் நடந்த விசாரணை அடிப்படையில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் திலகர் இன்று (செப்.26) கைது செய்யப்பட்டார்.

x