குமரியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 64 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள், மற்றும் கைதான கிருஷ்ணகுமாருடன் புதுக்கடை போலீஸார்.

நாகர்கோவில்: குமரி மாவட்டம் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை பாக்குகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதன் தொடர்ச்சியாக, குன்னத்தூர் பகுதி தோட்டவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து இன்று காலை புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகுமார் (38) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 56.25 கிலோ புகையிலை பொட்டலங்கள், 8 கிலோ உதட்டின் அடியில் வைக்கும் புகையிலை பொருள் என மொத்தம் 64 கிலோ போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.36,400 ஆகும். இவற்றுடன் கிருஷ்ணகுமார் வைத்திருந்த ரூ.8,110 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களை புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற போலீஸார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இதில் வேறு யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x