ஆபாச படமெடுத்து மிரட்டும் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள்: மதுரையில் பாதிக்கப்பட்ட பெண் புகார்


மதுரை: ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக குத்துச் சண்டை பயிற்சியாளர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர், விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: ”எனக்கு 2 மகன்கள். மூத்தமகன், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும், இளைய மகன் 10-ம் வகுப்பும் படிக்கிறான். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதால், தையல் கடை வைத்துள்ளேன். எனது இளைய மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இலவச குத்துச்சண்டை பயிற்சி எடுக்க மகனை அனுப்பி வைத்தேன்.

மதுரையைச் சேர்ந்த தேவராஜ் (30), மேலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28) ஆகியோர் எனது மகனுக்கு குத்துசண்டை பயிற்சி வழங்கினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளுக்கும் மகனை அழைத்துச் சென்றனர். இந்த நம்பிக்கையில் நானும் எனது மகனை அவர்களுடன் அனுப்பி வைத்தேன். மேலும், அவர்களே, வாகனத்தில் கொண்டு வந்து என் மகனை வீட்டில் இறக்கி விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இது போன்ற சூழலில் எனது செல்போன் எண்ணையும் அவர்கள் இருவரும் வாங்கிக்கொண்டனர். இதன்பின் இருவரும் என்னிடம் மகன் குறித்து அவ்வப்போது பேசினர்.

இந்நிலையில் மகனுக்கு தேர்வு நடந்ததால், அவனை பயிற்சிக்கு அனுப்பாமல் இருந்தேன். சம்பவத்தன்று தேவராஜ், ராஜ்குமார் செல்போனில் என்னிடம் பேசினர். அப்போது நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருப்பதாக கூறினேன். அங்கு வந்த அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி என்னை ஆபாசமாக படம் எடுத்தனர். மேலும், அந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டினர்.

வேறு வழியின்றி நானும் பல்வேறு தவணையில் ரூ.4 லட்சம் வரை கொடுத்தேன். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினர். வேறொரு எண்ணில் இருந்து ஆபாச படங்களை எனக்கே அனுப்பி மிரட்டல் விடுத்தனர். மேலும், தெப்பக்குளம் பகுதிக்கு என்னை வரவைத்து நான் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டனர். யாரிடமாவது கூறினால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, எனது ரூ.4 லட்சம் பணம், நகையை மீட்டு தரவேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x