உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூருக்கு வேலைக்கு வந்த 6 வங்கதேசத்தவர்கள் கைது 


திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூருக்கு வேலைக்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேரை, திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் தெற்கு போலீஸார் மற்றும் அதிவிரைவுப் படையினர் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது அங்கிருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களின் அடையாள ஆவணங்கள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல், வேலைக்கு சேர்ந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்தது கண்டறியப்பட்டது. வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர்(39), ரசிப் தவுன்(43), முகமது அஸ்லம்(41), முகமது அல் இஸ்லாம்(37), முகமது ராகுல் அமின்(30) மற்றும் சவுமுன் ஷேக்(38) என்பது தெரியவந்தது. 6 பேரையும், வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் தெற்கு போலீஸார் இன்று கைது செய்தனர்.

x