கள்ளக்குறிச்சி அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவர் கைது


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது மனைவி சுதா (28). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுதா மாயமான நிலையில், அவரது உறவினர்கள் அவரை தேடினர்.

இதற்கிடையே சுதாவின் உடல் எரிந்த நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் கிடந்தது. போலீஸார் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சுதாவின் கணவர் கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், சொத்து பிரிப்பது தொடர்பாக கார்த்திக்கின் சகோதரர்கள் கொடுத்த பணம் குறித்து, சுதா கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரை அடித்துக் கொலை செய்து, எரித்துள்ளார். பின்னர் எரிந்த உடலை போர்வையில் கட்டி அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலின்பேரில் கிணற்றில் கிடந்த உடலை மீட்டு, சங்கராபுரத்தில் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

x