தஞ்சை பாலியல் வழக்கில் 6 பேருக்கும் ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட இளம்பெண் எதிர்ப்பு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் ஆக.12-ம் தேதி 23 வயது இளம் பெண்ணுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் கூட்டு பாலியல் தொல்லை அளித்தனர். இதுதொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவிதாசன்(25), திவாகர் (26), பிரவீன் (21), வேல்முருகன் (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

இவர்களில் சிறுவர்கள் 2 பேரும் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேரும் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், வேல்முருகனைத் தவிர்த்து மற்ற 3 பேரும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்கள் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் தலைமையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது தந்தை ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால், எனது உயிருக்கு ஆபத்து நேரிடும்.

எனவே, 6 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. அவர்களை சிறையிலேயே வைத்து, புலன் விசாரணையை முடித்து, குற்ற பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

x