வண்டலூர் அருகே சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது


மாம்பாக்கம்: வண்டலூர் அருகே மாம்பாக்கத்தில் இரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது பள்ளி சிறுமியைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் 14 வயதுள்ள 9ம் வகுப்பு மாணவி கடந்த 18ம் தேதி இரவு 7 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதில் திடீரென ஒருவர் அப்பெண்ணின் வாயில் துணியை வைத்து அழுத்திக் கொள்ள மற்ற இருவரும் அச்சிறுமியை இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

பின்னர் வெளியே வந்த சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். சிறுமியும் நடந்த விபரங்களை அவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உருட்டுக் கட்டையுடன் மூவரையும் தேடினர். இதில் 2 பேர் தப்பிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதியானது.

புழல் சிறையில் அடைப்பு: இதையடுத்து இந்த வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (21) மற்றும் 2 சிறுவர்கள் (16) என 3 பேரை கைது செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

x