நிலத் தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் அவரது மகன்கள் கைது @ செய்யூர்


கோதண்டம், பொன்னம்பலம், கோவிந்தராஜ் (படம்; இடமிருந்து வலமாக)

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக தம்பியை தனது மகன்களுடன் சேர்ந்து அடித்த கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் ஆக்கினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (50) இவரது அண்ணன் கோதண்டம் (55). இவர்கள் இருவருக்கும் அதே கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி காலையில் அரிகிருஷ்ணன் தனக்கு சொந்தமான வயல் வெளி பகுதியில் வரப்பை சீரமைத்துள்ளார். அந்தப் பகுதிக்கு வந்த அவரது அண்ணன் கோதண்டத்தின் மூத்த மகன் (கோவிந்தராஜ் 28) தனது தந்தைக்கு சொந்தமான விவசாய நில பகுதியில் வரப்பை ஏன் நீ சீரமைக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. இதனை அறிந்து கோதண்டம் அவரது இளைய மகன் பொன்னம்பலம் (30) அங்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து மூவரும் சேர்ந்து அரிகிருஷ்ணனை நிலத்தில் கிடந்த கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அரிகிருஷ்ணனின் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அரிகிருஷ்ணனின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரிகிருஷ்ணனின் மகள் அகிலா (23) கொடுத்த புகாரின் பேரில் செய்யூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜ், பொன்னம்பலம், கோதண்டம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அரிகிருஷ்ணன் உயிரிழந்ததால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சொத்து தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் மகன்கள் சேர்ந்து தாக்கி கொன்ற பயங்கர சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.