பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தந்தை: 4வதாக பெண்குழந்தை பிறந்ததால் ஆத்திரம்


உத்தரப் பிரதேசம்: நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, ஒரு மாத பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியைச் சேர்ந்த பப்லு திவாகர், தனது ஒரு மாத பெண் குழந்தையை அடித்துக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், “ எட்டாவா பகுதியைச் சேர்ந்த 30 வயதான பப்லு திவாகருக்கு முதல் மனைவியுடன் இரண்டு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக அவர் கூறினார். பின்னர் அவர் மறுமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மனைவியுடன் அவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டாவதாகவும் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவர், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போதையில் இருந்த திவாகர் தனது மனைவியின் மடியில் இருந்த ஒரு மாத பெண் குழந்தையை பறித்து தரையில் வீசியுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. இதனையடுத்து அவரது மனைவி தீபு அளித்த புகாரின் அடிப்படையில், திவாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்” என அவர் தெரிவித்தார்

x