பாலியல் புகார்: பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது!


பெங்களூரு: பிரபல சினிமா நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் பாலியல் புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் மீது, அவர் குழுவில் பணிபுரியும் 21 வயது பெண் நடனக் கலைஞர், ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார்.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜானி மாஸ்டர், தற்போது பெங்களூருவில் ஹைதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் காவலில் வைக்கப்பட்டு பின்னர் ஹைதராபாத்திற்கு மாற்றப்படுவார் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர், ஜானி மாஸ்டர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

x