அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: ஜாபர் சாதிக் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!


சென்னை: போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இதில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் 12வது நபராக இயக்குநர் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சட்ட விரோதமாக பணத்தை கையாண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை கோரிக்கை முன்வைத்துள்ளது. போதைப் பொருள் கடத்தியதாக பதிவான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

பின்னர் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, தமிழகத்தில் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான். அந்த அடிப்படையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமீரிடம் விசாரணை நடத்தியது.

x