மகனின் பிறந்தநாள் விழா மேடையிலேயே தாய் மாரடைப்பால் மரணம்: அதிரவைக்கும் சிசிடிவி காட்சி


குஜராத்: வல்சாத் மாவட்டத்தில் தனது மகனின் பிறந்தநாள் விழாவின் போது தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வல்சாத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று 5 வது பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் கௌரிக், தனது தாயார் யாமினி பென் மற்றும் தந்தையுடன் மேடையில் குதூகலமாக இருந்தார். அப்போது திடீரென யாமினிபென் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு உதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் யாமினிபென் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் டிஜேயின் இசைக்கு நடனமாடுவதைக் காணலாம். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார் யாமினிபென் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மேடையில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். திடீரென்று, யாமினிபென் தனது கணவரின் தோளில் தலை சாய்த்து மேடையில் சரிந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப ஆண்டுகளில், நாட்டில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடைபயிற்சி, நடனம் அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கூட பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் இப்போது அதிகமாகியுள்ளது. முன்னதாக, மாரடைப்பு என்பது பொதுவாக 50-65 வயதிற்குட்பட்டவர்களிடையே பரவலாக காணப்பட்டது, ஆனால் சமீபத்தில், இந்த பிரச்சினை 20 முதல் 40 வயதுடையவர்களையும் கணிசமாக பாதிக்க ஆரம்பித்துள்ளது.

x